தமிழாக்கம்-ஓம் பூர்ணமதஹ

ஓம் பூர்ணமதஹ பூர்ணமிதம்! பூர்ணாத் பூர்ணம் உதச்யதே!! பூர்ண்ஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணமேவ அவசிஷ்யதே!!!

பரமன் எனும் மெய்ப்பொருள் பற்றிய இந்த உபனிடத கடவுள் வாழ்த்துச் செய்யுளின் கருத்தை பரமன் அருளால் விளக்க முனைகின்றேன். இது ஈஷவச்ய (அல்) ஈஷா உபனிடதத்தின் கடவுள் வாழ்த்து பாடமாக சொல்லப்படுவதாகும். குருதன்னை நாடி வந்துள்ள சீடனுக்கு மெய்ப்பொருள் அறிய எளிய படிகளை சொல்லிக்கொடுக்கும் விதம் இந்த வரிகள் அமைக்கப்பட்டுள்ளது. பல மெய்ப்பொருள் விழைவர்களை மிகவும் கவர்வது இச்செய்யுள். படிக்க மனப்பாடம் செய்ய மிக எளிது. பூர்ணம் அதாவது முழுமை என்னும் சொல்லே ஏழு முறை திரும்ப வருவதும் ஒரு காரணம் ஆனால் அதன் பொருள் முழு வேதாந்த தத்துவத்தை நான்கே சொற்றொடர்களில் போதிக்கிறது.

தமிழாக்கம்:
ஓம் முழுமை அதோ முழுமை இதோ! முழுமையினின்றும் முழுமை தோன்றியது!! முழுமையின் முழுமை நீக்கின் மிஞ்சுவதும் முழுமையே!!!

பொருள்:
ஓம் என்னும் மந்திரத்தின் மூலம் அறியப்படும் பரமனாகிய மெய்ப்பொருள் முழுமையானவன் : முழுமையானவன் உணரப்படும் இடம் மனமாகும்: மனம் அந்த முழுமையான மெய்ப்பொருளின் தோற்றமே: அந்த தோற்றத்தை அறவே நீக்கினால் முழுமையை முழுவதுமாக உணரலாம்….

விளக்கம்:
முதல் சொற்றொடர்:
“ஓம் முழுமை அதோ” ‘ஓம்’ மந்திரத்தின் பெருமை உணர்த்தப்படுகிறது. ஏனென்றால் இந்த ஓம் என்னும் மந்திரத்தை தியானித்து முழுமையான பரமனுடன் ஐக்கியமடைந்து மோட்சம் அடைய முடியும். குரு எளிமையாக சீடனுக்கு அதோ மெய்ப்பொருள் என்று சொல்லி நம்பிக்கை கொடுக்கிறார். முழுமையைப் பற்றி போதிக்க முழுமையை உணர்ந்த குருவால் மட்டுமே முடியும் என்று கூறவும் வேண்டுமா!

இரண்டாவது சொற்றொடர்:
“முழுமை இதோ” அதோ என்று கேட்டவுடன்உலகம் எங்கும் தேடும் சீடனை எங்கேயும் தேடவேண்டா, உன் மனதிலேயே தேடு என்று அடுத்த படியை சொல்கிறார். எங்கெங்கோ நெடுநாள் தேடியும் கிடைக்காமல் முழுதும் களைத்து வழி கேட்டு வரும் பயணிக்கு அவர் தேடும் இடம் என்று வெகு அருகான்மையான பயணியின் தற்சமயஇடத்தையேகாண்பித்தால் அந்த பயணி எவ்வளவு மகிழ்வாரோ அந்த அளவு மகிழ்ச்சியை ‘முழுமையானவன்இதோ’ என்று இச் சொற்றொடர் மூலம் சீடனுக்கு நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார்.

மூன்றாவதுசொற்றொடர்: “முழுமையினின்றும் முழுமை தோன்றியது” இவ்வண்டம் என்னும் படைப்பையே ஆராயும் சீடனுக்கு அதை விட்டு படைப்பு முழுவதுமே முழுமையானவனின் தோற்றமே, மனம் உட்பட என்று அடுத்த பாடம் சொல்கிறார். இந்தக் கட்டத்தில் தான் சீடன் மனதில் பரமனுக்கும் படைப்புக்கும் இடையே பற்பல குழப்பங்கள் எழுகின்றன. இரண்டு பொருள்கள் தனித்தனித் தன்மையுடன் இருந்தால் அவைகளை அடையாளம் கண்டு பிரித்து உணர்வது எளிது . ஆனால் இங்கோ ஒரே பொருள் பலவிதமாக தோன்றும் போது உண்மைப்பொருள் எது என அறிவது கடினம் . இறைவன் மற்றும் குருவின் அருளன்றி படைப்பினின்றும் பரமனை உணர்தல் இயலாதது

நான்காவதுசொற்றொடர்:
“முழுமையின் முழுமை நீக்கின் மிஞ்சுவதும் முழுமையே” முழுமையானவனின்றும் தனித்து மனம் உள்ள மட்டும் முழுமை முழுமை பெறாது. முழுமையை உணர இயலாது. ஆதலின் மனத்திலுள்ள நான் என்னும் தன்மையை முற்றிலும் நீக்க விழைதலின் மூலம் முழுமையை என்றும் உணர்ந்து பிறப்பிறப்பெனும் சூழலினின்றும் வீடு பெறலாம் என்று இறுதிப் பாடம் சொல்கிறார்.

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி !

4 comments

  1. You can attempt for better presentation of the article for ease of reading….. Liked it. (More Paras and slokas shown prominently…)

    1. Thanks a ton! Corrected and updated!

Leave a reply to stockresearch52 Cancel reply